குதிரை ஓடியவருக்கு விளக்க மறியல்: கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவு

🕔 May 25, 2022

– பாறுக் ஷிஹான் –

.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தனது சகோதரன் முறையானவருக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரை (குதிரை ஓடியவரை) விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

நாடு பூராகவும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (23)  ஆரம்பித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவரே இந்த ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறிப்பிட்ட பரீட்சார்த்தி தூர இடமொன்றில் இருந்து வருகை தந்துள்ளதுடன்  சமய பாட பரீட்சையை சகோதரனுக்கு பதிலாக எழுதியதுடன் தனது அடையாள அட்டையின் புகைப்படத்தை மாற்றியுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் ஆள் மாறாடத்தில் ஈடுபட்டவர் அடையாள அட்டையில் மாற்றம் செய்துள்ளார். 32 வயதுடைய தனது சகோதரனுக்கு பதிலாக 28 வயதுடைய தம்பி முறையான சகோதரனே இவ்வாறு பரீட்சை எழுதி சிக்கியுள்ளார்.

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் ஆள்மாறட்டம் செய்து பரீட்சை எழுதிய மேற்படி சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்து, மறுநாள் செவ்வாய்க்கிழமை (24) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், அவரை இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்