நாடாளுமன்ற உறுப்பினராக இனி வரப்போவதில்லை: சபையில் முன்னாள் அமைச்சர் அலி சப்றி தெரிவிப்பு

🕔 May 20, 2022

நாடாளுமன்ற உறுப்பினராக இனி ஒருபோதும் வரப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் சிரேஷ்ட சட்டத்தரணி அலி சப்றி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், நாட்டின் உத்தேச வருமானம் ரூ. 1.4 டிரில்லியன் ரூபா என்றும், செலவு 3.4 டிரில்லியன் ரூபா என்றும் கூறினார்.

போராட்டங்களை நடத்தி அறிவிப்புகளை வெளியிடுவதோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை வெட்டுவதோ தற்போதைய நெருக்கடியை தீர்க்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசத்தை நேசிப்பதோடு, வரி செலுத்தும் ஒரு நல்ல மனிதர் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்குள் நுழையக்கூடிய அடுத்த தலைமுறைக்கு வழி வகுக்கும்படியும் அவர் மேலும் கூறினார்.

“நான் இந்த நாடாளுமன்றத்தை மீண்டும் காண மாட்டேன், எனக்கு அது தேவையில்லை. இவ்வாறான சூழலைக் காண நாங்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழையவில்லை. நான் இனி ஒருபோதும் திரும்பி வரமாட்டேன்” என்று அவர் சபையில் தெரிவித்தார்.

புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வீடு கும்பலால் தாக்கப்பட்ட போது, ​​தன்னுடைய சட்டத்துறை சகாக்கள் மற்றும் உறவினர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த சம்பவத்திற்கு ஆதரவு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர், இவ்வாறான கொடூரமான சமூகத்துடன் நாடு எவ்வாறு முன்னேற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

“நான் இங்கு போர் செய்ய வரவில்லை. என் குழந்தைகள் மற்றும் என் பெற்றோர் குறித்து நான் பயப்படுகிறேன். நாங்கள் 05 சதத்தைக் கூட மோசடி செய்து திருடவில்லை. நான் கிட்டத்தட்ட 42 மில்லியன் ரூபாவை அமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன் கடந்த ஐந்து ஆண்டுகளில் வருமான வரியாக செலுத்தியுள்ளேன்” என்றும் அலி சப்றி குறிப்பிட்டார்.

இது தாமதமானாலும், இலங்கையை கட்டியெழுப்புவதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்கும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்