பிரதமர் ரணில் அரசாங்கத்துக்கு அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆதரவு: உயர்பீடம் கூடி தீர்மானம்

🕔 May 16, 2022

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், மக்களுக்கான உடனடித்தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, புதிய பிரதமரின் செயற்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான முடிவினை தேசிய காங்கிரஸின் உயர்பீடம் எட்டியுள்ளது என, அந்தக் கட்சியின் சட்டம் மற்றும் கொள்கை விவகார ஆலோசகர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தெரிவித்திருக்கிறார்.

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி நியமித்துள்ள இவ்வேளையில், தேசிய காங்கிரஸ் இது தொடர்பில் முக்கிய தீர்மானங்களை எட்டுவதற்காக அதன் உயர் பீடம், தேசிய காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாஉல்லா தலைமையில் இன்று (16) கூடியது.

சவால்களை எதிர்கொள்ள புதிய பிரதமர் நியமனத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க – தேசிய காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பி வைத்த கடிதம் தொடர்பிலும் கட்சியின் உயர் பீடத்தில் இன்று விரிவாக ஆராயப்பட்டதாகவும், மர்சூம் மௌலான குறிப்பிட்டுள்ளார்.

‘நாடு தற்பாேது எதிர்கொள்ளும் தேசிய பொருளாதார நெருக்கடியை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக தேசிய காங்கிரஸ் பார்ப்பதோடு மட்டுமன்றி, நாட்டு மக்களுக்காக அவை அனைத்தும் அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

எனவே தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், மக்களுக்கான உடனடித்தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, புதிய பிரதமரின் செயற்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான முடிவினை தேசிய காங்கிரஸின் உயர்பீடம் எட்டியுள்ளது.

மேலும் நாடாளுமன்றத்தில் ஒன்றாகச் செயற்படும் சக 10 கட்சிகளாேடு இணைந்து, தேசிய காங்கிரஸின் கொள்கைகளுக்கு அமைவாக, ஒவ்வாெரு விடயதானத்தையும் தனித்தனியாகக் கருத்திற் கொண்டு – அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கும் கட்சி உயர் பீடம் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது’ எனவும் மர்சூம் மௌலான தெரிவித்திருக்கிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்