பிரதமரானார் ரணில்
🕔 May 12, 2022
பிரதம மந்திரியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
கடந்த 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியிருந்தார். இதனையடுத்து, அமைச்சரவையும் கலைந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று (11) மாலை சந்தித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
இதனையடுத்து, ஜனாதிபதி நேற்றிரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய விசேட உரையில், மக்கள் நம்பிக்கைக்குரிய, பெரும்பான்மையை கொண்ட ஒருவரை பிரதமராகவும், புதிய அமைச்சரவையையும் ஒரு வாரத்திற்குள் நியமிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இது இவ்வாறிருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பொதுத் தேர்தலில் எந்தவொரு மாவட்டத்திலும் வெற்றிபெறாத ஐக்கிய தேசியக் கட்சி, தனக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் உறுப்புரிமைக்கு அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றுக்கு அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.