கடலில் குளித்த மாணவர்கள் இருவர் மாயம்: மருதமுனைப் பகுதியில் சோகம்

🕔 May 11, 2022

– பாறுக் ஷிஹான் –

பாடசாலை மாணவர்கள் மூவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில், ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) மாலை 5.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் – மருதமுனை கடற்கரைப்பகுதியில் நடந்துள்ளது.

சுமார் 17 முதல் 18 வரை வயது மதிக்கத்தக்க அங்குள்ள பிரபல பாடசாலை மாணவர்களே இவ்வாறு இவ்வனர்த்தத்தில் சிக்கிக்கொண்டனர்.

வழமை போன்று குறித்த கடற்கரைப்பகுதியில் விளையாடிய பின்னர் இவர்கள் மூவரும் குளிப்பதற்காக அப்பகுதிக்கு சென்ற நிலையில் இவ்வாறு கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதில்  ஒருவர் மீட்கப்பட்டதுடன் ஏனைய இருவரையும் தேடும் பணியில்  கடற்படையினர், கடற்தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தத்தில் மூவரில் ஒருவர் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில், அவரை காப்பாற்றும் முயற்சியில் ஏனைய இரு நண்பர்களும்  ஈடுபட்டதாகவும், அவர்கள்  அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

மீட்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காணாமல் போயுள்ள மாணவர்கள் இருவரும் மருதமுனையைச் சேர்ந்தவர்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்