விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்ட மூலத்தின் சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை: உச்ச நீதிமன்றம்
விசேட பண்ட மற்றும் சேவை வரி (GST) சட்டமூலத்தின் பல சரத்துகள் இலங்கையின் அரசியல் அமைப்புடன் ஒத்திசையவில்லை என்று உச்ச நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிந்த மனுக்களின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பி இருந்தது.
குறித்த வியாக்கியானத்தை சபாநாயகர் இன்று (22) நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் அறிவித்தார்.
இதன்படி இந்த சட்டமூலத்தின் பல சரத்துகள் – அரசியல் அமைப்புடன் ஒத்திசையாத நிலையில், அவற்றை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதாக இருந்தால், சபையின் அனைத்து உறுப்பினர்களின் 03 இல் 02 பெரும்பான்மை தேவையாகும்.
அல்லது பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் அவற்றை நிறைவேற்ற முடியும்.
இருந்தபோதிலும், இதன் நடைமுறை சாத்தியம் கருதி யோசனை முன்வைத்துள்ள உச்ச நீதிமன்றம், அரசியல் யாப்புடன் ஒத்திசையாத சரத்துகளை மாத்திரம் திருத்தி, அரசியல் அமைப்புடன் இசைய செய்து, அதனை நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் என்று தமது வியாக்கியானத்தில் குறிப்பிட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.