அட்டாளைச்சேனையில் 14 வயது சிறுமி கடத்தல்; பின்னணியில் உள்ளுர் அரசியல்வாதி: பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பெற்றோர் விசனம்
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14வயதுடைய சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக, சிறுமியின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் அம்பாறைக் காரியாலயம் ஆகியவற்றில் சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 12 நாட்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர், குறித்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த முறைப்பாட்டு தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று சிறுமியின் பெற்றோர் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.
தங்களது மகளுக்கு என்ன நடந்துள்ளது என்பதையும் அவர் உயிரோடுதான் இருக்கிறாரா என்பதனைக்கூட அறியமுடியாதுள்ளது என, பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் கடத்தல் தொடர்பில் பொறுப்புவாய்ந்த நிறுவனங்களுக்கு அறிவித்தும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை தங்களுக்கு கவலையினையும் ஏமாற்றததினையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தங்களது குழந்தையை மீட்டெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த சிறுமியை கடத்திய குற்றத்துடன் தொடர்புடையவர்களை அட்டாளைச்சேனை பிரதேசத்தினை சேர்ந்த அரசியல்வாதியொருவர் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.