இயற்கை உர விவகாரம்; இலங்கை தொடர்பில் சீனா சீற்றம்: அறிவியல் இல்லாத முடிவு எனவும் தெரிவிப்பு
இலங்கையின் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் (NPQS) ‘அவசர’ முடிவுக்கு அறிவியல் அடிப்படை இல்லை என இலங்கையில் உள்ள சீனத் தூதரக தெரிவித்துள்ளது.
‘சீவின்’ (SEAWIN) எனும் சீன நிறுவனத்திடமிருந்து இயற்கை பசளையினை இறக்குமதி செய்வது தொடர்பாக, அறிவியல் மற்றும் உண்மைகளை மதிக்குமாறு இலங்கைக்கு சீனா கூறியுள்ளது.
சீன நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட இயற்கை பசளையின் இரண்டாவது மாதிரியில் தீங்கு விளைவிக்கும் பாக்றீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, குறித்த நிறுவனத்திடமிருந்து இயற்கை உரத்தை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக விவசாய அமைச்சு சமீபத்தில் அறிவித்திருந்தது.
தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை (NPQS) நடத்திய சோதனைகளின் போது, இந்த பாக்றீரியா கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் ‘அவசர’ முடிவுக்கு அறிவியல் அடிப்படை இல்லை என்று இலங்கையில் உள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை (NPQS) அறிக்கையின் அடிப்படையில் ‘சீவின்’ (SEAWIN) எனும் சீன நிறுவனத்தின் இயற்கை உரத்தை நிராகரிப்பதற்கு, இலங்கை அதிகாரிகள் எடுத்த முடிவு கேள்விக்குரியது மட்டுமல்லாமல் குறித்த நிறுவனத்திற்கு பெரும் நிதி இழப்பையும் ஏற்படுத்துவதாகவும்டசீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அவசரமாகத் தேவைப்படும் இயற்கை உரத்தை வழங்கவதற்காக ‘சீவின்’ (SEAWIN) நிறுவனம், இலங்கையின் விவசாய அமைச்சினால் திறந்த விலைமனுக் கோரல் (டெண்டர்) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் சீன தூதரகம் குறிப்பிட்டது.