விருப்பு வாக்கு பற்றிய தெளிவில்லாமல் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வேண்டாம் என்கின்றனர்: மனோ கணேசன்

🕔 October 9, 2021

மிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் கூட, ‘விருப்பு வாக்கு’ பற்றிய தெளிவு இல்லாமல், “விருப்பு வாக்கு வேண்டாம்”, “தொகுதி முறைக்கு போவோம்” என்ற கோஷங்களை எழுப்புகிறார்கள் எனத் தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும், நடாளுமுன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“விருப்பு வாக்கு என்பது ஜனநாயகத்தின் உச்ச கட்டம். கட்சிக்கு வாக்களிக்கும் ஒரு வாக்காளர், அந்த கட்சித் தலைமை முன்னிறுத்தும் வேட்பாளருக்கு மட்டும்தான் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து, விருப்பு வாக்கு மூலம் தப்புகிறார்” எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தேர்தல் முறை என்பது – தற்போது பேசப்படும் ஒரு தலைப்பாக உள்ளது. மாகாணசபைத் தேர்தலை விகிதாசார முறையில் நடத்த இப்போது அரசாங்கம் இணங்கியுள்ளது. தேர்தல் முறையை தற்போதைக்கு மாற்றப்போனால் பெரும் தாமதம் ஏற்படும்.

இதில் நாம் உறுதியாக இருந்தோம். ஆகவே, தெரிவுக்குழுவில், அரசாங்கம் – எதிரணி மத்தியில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணம் அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தமாகும். ஆயினும் இது தற்காலிக உடன்பாடாகவே உள்ளது.

ஆகவே உள்ளூராட்சி, மாகாணசபை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கான தேர்தல் முறைமைகள் பற்றிய அவதானம் தொடர்ந்து தேவை. ‘விகிதாசார முறைமை வேண்டாம்’, ‘தொகுதி முறையே வேண்டும்’ என தெரிவுக்குழுவில் பெரும்பான்மை, குறிப்பாக அரசாங்க கூட்டணி அரசியல்வாதிகள் கூப்பாடு போட்டார்கள்.

‘விகிதாசார முறைமை என்பது நாட்டில் சிதறி வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்துவதற்கான ஒரேயொரு முறைமை’ என நாங்கள் ஒரே குரலில் சொன்னோம். எங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட்ட பெரும்பான்மை கட்சிகளும் ஆதரவளித்தார்கள்.

நாடாளுமன்றமும், மாகாணசபைகளும் – தேசிய, மாகாண சட்டமூலங்களை விவாதிக்கும் நிறுவனங்களாகும். ஆகவே இங்கே உள்ளூர் தேர்தல் தொகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களின் அவசியம் கிடையாது.

ஆனால் நீர், மின்சாரம், வீதிகள் உட்பட மக்களின் நாளாந்த விவகாரங்களை கையாளும் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற வட்டார உறுப்பினர்களாக இருப்பது அவசியம். ஆகவே உள்ளூராட்சி மன்றங்களில், அவ்வந்த மன்றங்களின் வட்டாரங்களுக்கு பொறுப்புக் கூறக்கூடிய உறுப்பினர்களுக்கான அவசியம் இருக்கின்றது.

ஆகவே நாடாளுமன்றம், மாகாணசபைகளுக்கு தொகுதி முறை தேவையில்லை என நாம் கூறினோம். உள்ளூராட்சி மன்றங்களுக்கு தொகுதி (வட்டார) உறுப்பினர்கள் இருக்கலாம் எனவும் நாம் கூறினோம்.

அதேபோல்தான், விருப்பு வாக்கு என்பது ஜனநாயகத்தின் உச்ச கட்டம். கட்சிக்கு வாக்களிக்கும் ஒரு வாக்காளர், அந்த கட்சி தலைமை முன் நிறுத்தும் வேட்பாளருக்கு மட்டும்தான் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து, விருப்பு வாக்கு மூலம் தப்புகிறார்.

கட்சிக்கு வாக்களிக்கும் அதேவேளை தனக்கு பிடித்த வேட்பாளரை தெரிவு செய்ய ஒவ்வொரு வாக்காளருக்கும் ஜனநாயக சுதந்திரத்தை, ‘விருப்பு வாக்கு’ வழங்குகிறது. இதை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். ‘விருப்பு வாக்கு வேண்டாம்’, ‘விகிதாசார முறைமை வேண்டாம்’, ‘தொகுதி முறைக்கு போவோம்’ என்பவை, பெரும்பான்மையின பெரிய கட்சிகளின் கோஷங்கள்தான்.

தமிழ், முஸ்லிம் நம்மவர்கள் கூட – பொதுமக்களும், அரசியல்வாதிகள் சிலர் கூட- இவைபற்றிய தெளிவு இல்லாமல், ‘விருப்பு வாக்கு வேண்டாம்’, ‘தொகுதி முறைக்கு போவோம்’ என்ற கோஷங்களை எழுப்புகிறார்கள். இவை பற்றிய அவதானம் தேவை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்