விகிதாசார முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்: றிஷாட் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் குழுவினர் தெரிவிப்பு

🕔 October 7, 2021

பொதுத்தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவை விகிதாசார முறைப்படி, தற்போது நடைமுறையில் உள்ளவாறு நடத்தப்பட வேண்டும் என்று, தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டினை முன்வைத்துள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம். ஷஹீட், கட்சியின் சட்டதுறை பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் ஆகியோர், இன்று (07) தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் தமது கட்சியினுடைய நிலைப்பாட்டை முன்வைத்தனர்.

அதன் அடிப்படையில், மிக முக்கியமாக பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விடயங்களிலே கட்சியின் நிலைப்பாட்டை அவர்கள் இங்கு வெளிப்படுத்தியதுடன், விரிவான கருத்தாடல்களையும் மேற்கொண்டனர்.

இதன்போது, பொதுத்தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவை விகிதாசார முறைப்படி, தற்போது நடைமுறையில் உள்ளவாறு நடத்தப்பட வேண்டும் என்ற வாதங்களை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் அங்கு முன்வைத்தனர்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும், ஆரம்பகாலத்திலே இருந்த விகிதாசார முறைப்படியான தேர்தல் முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இப்பொழுது இருக்கின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை நாட்டுக்கு உகந்தது அல்ல என்றும் அங்கு அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, விசேடமாக புலம்பெயர்ந்தவர்களினுடைய வாக்குரிமை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்ற விடயம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதி விசேடமாக, வட மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டு, புத்தளம் உள்ளிட்ட இதர மாவட்டங்களிலே வாழ்ந்துவரும், அதாவது இன்னும் தமது சொந்த ஊரிலே குடியேறுவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களுக்கும் விஷேட சலுகை அடிப்படையில், அவர்கள் தங்கியிருக்கும் மாவட்டங்களில் உள்ள முகாம்களில் இருந்தே, தமது சொந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்றவர்களுக்கு வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் இந்த திருத்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசினரால் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்