நியூசிலாந்தில் கத்திக் குத்து நடத்திய நபர் பற்றிய விவரங்கள் வெளியாகின: முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன அறிக்கையும் வெளியீடு
நியூசிலாந்தின் ஒக்லான்ட் நகரிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில், பொதுமக்கள் 06 பேர் மீது கத்திக் குத்து நடத்திய பின்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் – இலங்கையின் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் 2011ஆம் ஆண்டு மாணவர் வீசாவில் இலங்கையிலிருந்து நியூசிலாந்து சென்றதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் முகமட் சம்சுதீன் ஆதில் என அறியப்படுகின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நியூசிலாந்து புலனாய்வாளர்களின் விசாரணைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க, இலங்கை அதிகாரிகள் தயாராக இருக்கின்றனர் என்று, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கையிலுள்ள 22 முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து, நியூசிலாந்தில் நேற்று நடந்த வன்முறைச் சம்வத்தைக் கண்டித்துள்ளன.
‘நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒருவரால் ஒக்லாந்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறோம். அனைத்து இலங்கையர்கள் சார்பாகவும், குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாகவும், இந்த அர்த்தமற்ற மற்றும் பயங்கரமான வன்முறைச் செயலை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம்’ என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பான செய்தி: நியூசிலாந்தில் பொதுமக்களை கத்தியால் குத்திய இலங்கை நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி: ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைவர் என பிரதமர் தெரிவிப்பு