மரண தண்டனைக் கைதி ‘பொட்ட’ நௌபர் மரணம்
மரண தண்டனைக் கைதியும் பிரபல பாதாள உலக நபருமான ‘பொட்ட’ நௌபர் எனப்படும் எம். என். நௌபர் மரணமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பூசா உயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் – கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார்.
சிறுநீரக நோய்க்கான பரிசோதனைக்காக கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, அன்ரிஜன் சோதனை நடத்தப்பட்டதில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அவர் மேலதிகச் சிகிச்சைக்காக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
“மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ‘பொட்ட’ நௌபர் எனப்படும் நௌபர், கோவிட் பாதிப்பு காரணமாக இறந்து விட்டார்” என்று சிறைச்சாலை பேச்சாளர் மேலும் ரெிவித்துள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை செய்யப்பட்ட வழக்கில், பொட்ட நௌபருக்கு 2004ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.