சமையல் எரிவாயு; புதிய நிறுவனம்:விரைவில் வருகிறது
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் சமையல் எரிவாயு தயாரிக்கும் புதிய நிறுவனத்தை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது.
பொதுமக்களுக்கு நியாயமான விலையில் எரிவாயுவை வழங்குவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிவாயுவில் கிட்டத்தட்ட 05 வீதத்தை உற்பத்தி செய்து, அதனை அரசுக்கு சொந்தமான லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்துக்கும், தனியார் நிறுவனமான லாஃப் கேஸ் நிறுவனத்துக்கும் வழங்குகின்றது.
சபுகஸ்கந்தவில் நாள் ஒன்றுக்கு 100,000 பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் ஏற்கனவே ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானம் நிறைவு செய்யப்பட்ட பின்னர், நாட்டின் எரிவாயு தேவையில் கிட்டத்தட்ட 20 வீதத்தினை உற்பத்தி செய்ய முடியும் என, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.