பாடசாலை பூட்டை உடைத்து, புதிய அதிபருக்கு நிர்வாகத்தை கையளித்த வலயக் கல்விப் பணிப்பாளர்: சாய்ந்தமருதில் சம்பவம்

🕔 August 4, 2021

– நூருல் ஹுதா உமர் –

சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்து புதிதாக நியமிக்கப்பட்ட அதிபரை, பாடசாலை நுழைவாயில் பூட்டை உடைத்து கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் தற்றுணிவில் உள்ளே அழைத்துச் சென்று கடமைகளை பெறுப்பேற்கச் செய்த சம்பவம் இன்று (04) புதன்கிழமை நடைபெற்றது.

குறித்த பாடாசாலை அதிபராக கடமையாற்றிய எம்.எஸ்.எம். வைஸால் வருடாந்த இடமாற்றம் மூலம் வேறு பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு புதிய அதிபராக யூ.எல். நஸார் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் புதிய அதிபர் நஸார் இன்று அதிபராக கடமைகளை பெறுப்பேற்க அல் ஹிலால் வித்தியாலயத்துக்கு வருகை தந்திருந்தபோது, பாடசாலை நுழைவாயில் பூட்டப்பட்டிருந்ததுடன் திறப்பும் யாரிடமும் கையளித்திருக்கப்பட்டிருக்கவில்லை.

இதனை அறிந்த கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் பாடசாலை பிரதான நுழைவாயில் பூட்டை உடைத்து புதிய அதிபரிடம் பாடசாலை நிர்வாகத்தை கையளித்தார்.

இது தொடர்பில் எமது ஊடகம் கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளரிடம் வினவியபோது, பாடசாலை அதிபராக இருந்த எம்.எஸ்.எம். வைஸால் சுகயீனம் காரணமாக வருகை தரவில்லை என்றும் திறப்பு யாரிடமும் வழங்கப்படாமலிருந்த காரணத்தினாலும் பூட்டை உடைக்க நேர்ந்ததாக கூறினார்.

மேலும் இன்று நிர்வாக கடமைகளை பொறுப்பேற்ற அதிபர் நஸார் நாளை அல்லது நாளை மறுதினம் முழுமையாக பாடசாலையை பொறுப்பேற்பார் எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

புதிய அதிபர் பொறுப்பேற்கும் நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி, பாடசாலை பிரதியதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பிராந்திய முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்