பிரபல நடிகை விபத்தில் பலி: 300 அடி பள்ளத்தில் வாகனம் வீழ்ந்தது
– க. கிஷாந்தன் –
பிரபல சிங்கள திரைப்பட நடிகை ஹயசிந்த் விஜயரத்ன (வயது 75) – வாகன விபத்தொன்றில் சிக்கி இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்தார்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை நகரத்துக்கு அருகாமையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இவர் மரணமடைந்தார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு வருகை தந்த இவர், இன்று (31) அதிகாலை நுவரெலியா – ஹட்டன் பிரதான வழியாக கொழும்புக்கு தனது வேனில் பயணித்துள்ளார்.
இந்த நிலையில் இவர் பயணித்த வேன் லிந்துலை நகரத்துக்கு அருகில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து சம்பவித்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வேனை செலுத்தி சென்ற சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் வேன் சாரதி லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸாரால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்த நடிகையின் சடலம் மீட்க்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பொலிஸாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.