நீர், மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்காது; நிதியமைச்சு

🕔 November 25, 2015
Ravi - 087நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தில் வற் வரி அதிகரிக்கப்பட்டமை காரணமாக – நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்வு கூறப்பட்டது.

ஆயினும், இது வரை 11 வீதம் எனும் தனி பெறுமானமாக அறவிடப்பட்ட வற் வரியானது, வரவு -செலவுத் திட்டத்தின் பின்னர், 0 வீதம், 8 வீதம், 12.5 வீதம் என மூன்று பிரிவுகளாக அறவிடப்படவுள்ளது.

அதற்கமை 11 வீதம் வற் வரியின் கீழ் இருந்த மொத்த மற்றும் சில்லறை வியாபாரம், வற் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதோடு, பொருட்களின் விலைகள் யாவும் வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், அரசாங்கத்தின் தலையீட்டின் கீழ் இயங்கும் அத்தியவசிய சேவைகளான நீர் வழங்கல், மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு சேவைகளும் இவ்வாறு வற் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சேவை வழங்குதல் தொடர்பில், நுகர்வோர் மீது எவ்வித வற் வரியும் அறிவிடப்படமாட்டாது எனவும, இதனால் எவ்வித கட்டண அதிகரிப்பும் இடம்பெறாது என்றும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் தேசிய உற்பத்திகள் தொடர்பில் இதுவரை அறவிடப்பட்டு வந்த 11வீத வற்வரி, 8 வீதமாக குறைக்கப்பட்டுள்ளமையினால், இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் எதிர்வரும் நாட்களில் குறைவடையும் எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்