ஈராக், சிரியாவில் அமெரிக்கா வான் தாக்குதல்: பென்டகன் அறிவிப்பு

🕔 June 28, 2021

ராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா நேற்று ஞாயிற்றுக்கிழமை வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்படும் வளாகங்கள், ஆயுத கிடங்குகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக பென்டன் கூறியுள்ளது.

அமெரிக்க படையினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் அதிபர் ஜோ பைடன் தெளிவாக உள்ளார் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

சமீபத்திய மாதங்களில் ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படையினரின் தளங்களை இலக்கு வைத்து பல்வேறு டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஆனால், அந்தத் தாக்குதல்களில் தமது பங்களிப்பு ஏதுமில்லை என்று ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஈராக்கில் ஜிஹாதிகள் இஸ்லாமியவாத நாடு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவுக்கு எதிராக போரிடும் சர்வதேச கூட்டுப்படையின் அங்கமாக 2,500 அமெரிக்க துருப்புகள் முகாமிட்டுள்ளன.

இந்த நிலையில், பென்டகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்தப்பட்ட துல்லியமான வான் தாக்குதல்களின் மூலம் சிரியாவில் இரண்டு இலக்குகளும் ஈராக்கில் ஒரு இலக்கும் குறி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதாய்ப் ஹெஸல்போலா, கதாய்ப் சய்யீத் அல் ஷுஹாதா ஆகிய ஈரானிய ராணுவ ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்கள், இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் ஆயுதங்களை குவித்து வைத்திருந்ததாக பென்டகன் கூறியுள்ளது.

2009ஆம் ஆண்டு முதல், கதாய்ப் ஹெஸ்போலா குழுவை தீவிரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈராக்கில் அமைதிக்கு அச்சுறுத்தலையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த அந்த குழு முயல்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்