சஹ்ரானின் சகோதரருக்கு வெடிமருந்து வழங்கியவர் ராசிக் ராஸா: குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா என்பவர் 2018 ஆம் ஆண்டு சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் மேற்கொண்ட வெடிகுண்டு பரிசோதனைக்காக வெடி மருந்துகளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயத்தை ராசிக் ராஸா என்பவர் ஒப்புக் கொண்டார் என பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
28 வயதுடைய காத்தான்குடி பகுதியை சேர்ந்த ராஸிக் ராஸா எனும் நபர் கல்முனை பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய, குறித்த சந்தேக நபரை மீண்டும் அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சஹ்ரானின் சகோதரருக்கு, தான் வெடிமருந்து வழங்கியதாக குறித்த நபர் ஒப்புக் கொண்டார் என தெரிவிக்கப்படுகின்றது.