சம்மாந்துறை பஸ் டிப்போவை அகற்றுவதற்கு எதிராக மீண்டும் கவனஈர்ப்பு நடவடிக்கை

🕔 April 5, 2021

– பாறுக் ஷிஹான் –

ம்மாந்துறையிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் டிப்போவை அங்கேயே நிரந்தரமாக வைக்குமாறு கோரி சம்மாந்துறை மக்கள்  இன்று திங்கட்கிழமை அந்த சாலைக்கு அண்மையில் திரண்டு கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் டிப்போ – வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து, அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்கவில்லை.

இந்த கவனஈர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்; இந்த போராட்டம் வெற்றியளிக்காவிட்டால் சாலைமறியல் போராட்டம் நடத்த உள்ளதாவும், அரசியல்வாதிகள் பலரும் தீர்வுகளை பெற்றுத்தருவதாக தங்களை ஏமாற்றுவதாகவும் அதனால் அவர்களை நம்பாது தொடர்ந்தும் தீர்வு கிட்டும்வரை அவ்விடத்திலையே கவனஈர்ப்பு நடவடிக்கையைத் தொடர உள்ளதாகவும் கூறினர்.

இது தொடர்பில் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அரச உயர்மட்டம் முதல் குறித்த திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சர்கள் வரை பேசியிருந்தும் இவ்விடயம் வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பகுதியில் அமைந்துள்ள  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை அங்கையே நிரந்தரமாக வைக்குமாறு கோரி இதற்கு முன்னரும் இரு வேறு கவனஈர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையில், தற்போது  மூன்றாவது தடவையாக ஆரம்பித்துள்ள இந்த நடவடிக்கை –  உரிய முடிவு கிடைக்கும் வரை தொடரவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் ஜனாதிபதி, பிரதமர், போக்குவரத்து அமைச்சர், பிராந்திய தலைவர்கள் என பலரையும் விழித்து எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திக்கொண்டு கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்வு கிடைக்கும் வரை போராடபோவதாக  அறிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்