வெப்பமான காலநிலை இரு வாரங்களுக்கு நீடிக்கும்; உடலை வருத்தும் வேலைகளில் ஈடுபட வேண்டாம்: பொதுமக்களுக்கு ஆலோசனை
நாட்டில் தற்பொழுது நிலவும் கடும் வெப்பமான காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
“இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை சூரியன் பூமிக்கு நேராக உச்சம் கொடுப்பதே இந்த கடும் வெப்பமான காலநிலைக்கு காரணமாகும்.
வெப்பம் காரணமாக நீர்நிலைகளிலுள்ள நீர் ஆவியாகி வளிமண்டலத்துடன் ஒன்று சேரும். இந்நாட்களில் காணப்படும் காலநிலைக்கு அமைய மழைக்கான முகில் விருத்தியடையும் சாத்தியம் குறைவாகும்.
இதனால் மழை பெய்வதற்கான சாத்தியம் இல்லை. காற்றும் குறைவடையும் சாத்தியம் உள்ளது. இந்த வெப்பக் காலநிலையில் கூடுதலாக வியர்வை வெளியேறும் தன்மை காணப்படும்.
இரண்டு வாரங்களில் இந்த காலநிலை குறைவடையலாம்” என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் உடலை வருத்தக்கூடிய வேலைகளில் ஈடுபட வேண்டாம் எனவும், இக்காலப்பகுதியில் கூடுதலாக நீர் அருந்துமாறும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க பொதுமக்களுக்கு கூறியுள்ளார்.