கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் சமல் ராஜபக்ஷவை சந்தித்தோம்; வாக்குறுதியும் வழங்கியுள்ளார்: கருணா அம்மான்

🕔 February 23, 2021

– பாறுக் ஷிஹான் –

ல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்  என பிரதமரின் மட்டக்களப்பு – அம்பாரை மாவட்டவிசேட இணைப்பு  செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திற்கு நேற்ற திங்கட்கிழமை வருகை தந்த நிலையில், இரவு கல்முனை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“தேர்தல் காலங்களில் மக்களுக்கு எம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகின்றோம். அந்த வகையில் திருக்கோவில் பாலக்குடா பகுதியில் நீண்டகாலமாக பேரூந்து சேவை இல்லாமல் இருந்தது. தற்போது பேரூந்து ஒன்றினை வழங்கி அச்சேவையை ஆரம்பித்து வைத்துள்ளோம்.

600 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டு பனை பொருள் உற்பத்தி தொடர்பில் ஒரு வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.

குறிப்பாக தம்பட்டை, திருக்கோவில் மற்றும் தாண்டியடி போன்ற இடங்களில் உள்ள குறித்த நிலையங்கள் அமைந்திருக்கும் இடங்களை சென்று பார்வையிட்டோம். சிறந்த முறையில் இவ்வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பனை உற்பத்தி பொருட்களை பெண்கள் மிக சிறப்பாக உற்பத்தி செய்கின்றனர்.

ஒவ்வொரு குடும்ப பெண்களுக்கும் மாதாந்தம் 3000 ரூபா நிதி வழங்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகின்றது. இதை பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த திட்டமாக ஆரம்பித்து வைத்துள்ளோம்.

வெளிநாடுகளில் இந்த முடிவுப்பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தற்போது ஏற்படுத்தியுள்ளோம். இதனூடாக கணவனை இழந்த பெண்கள் கூடுதலான பலன்களை அடைவார்கள்.

இது தவிர தலைநகரில் இரு வாரங்களாக அனைத்து அமைச்சுக்களுக்கும் சென்று அவர்களை சந்தித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் எடுத்து கூறி பல வேலைத்திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றோம்.

அதில் கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமாக அமைச்சர் சமல் ராஜபக்ஷவை சந்தித்துள்ளோம். இச்சந்திப்பு சிறந்த சந்திப்பாக அமைந்திருந்தது. இதன்போது பிரதேச செயலக விடயம் தொடர்பான திட்டங்கள் அனைத்தும் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சரும் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதற்கான செயலணியையும் உடனடியாக ஏற்படுத்தி தருவதாக கூறி இருக்கின்றார்.

ஆகவே இங்கு ஒன்றினை கூற விரும்புகின்றோம். கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்தில், ஒன்றினையும் விட்டுகொடுக்க மாட்டோம். தொடர்ந்தும் இத்திட்டத்தில் எமது முயற்சி தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். மிக விரைவில் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளேன். அந்த சந்திப்பிலும் கல்முனை விடயத்தை முன்னெடுக்கவுள்ளோம். அதற்கான ஆவணங்களை தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்