இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஆட்சியமைக்க இந்தியாவின் ஆளுங்கட்சியான பிஜேபி திட்டம்: திரிபுரா முதலமைச்சர் தெரிவிப்பு

🕔 February 15, 2021
அமித்ஷாவுடன் பிப்லாப் குமார் தேப்

ந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஆட்சியமைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அந்த மாநில முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவருமான பிப்லாப் குமார் தேப் உரையாற்றிய போதே இதனைக் கூறினார்.

இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பாரதிய ஜனதா விரும்புவதாக அவர் இதன்போது கூறினார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்;

“உள்துறை அமைச்சரான அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக இருந்தபோது, அகர்தலா மாநில அரசு விருந்தினர் மாளிகையில் பல்வேறு தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர், இந்திய மாநிலங்களை தாண்டி நேபாளம் மற்றும் இலங்கையிலும் ஆட்சியை விரிவுபடுத்த கட்சி திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்” என்றார்.

திரிபுரா முதலமைச்சரின் இந்த பேச்சு, அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறையாண்மை மிகுந்த நேபாளம், இலங்கை நாடுகளுக்கு எதிராக ஜனநாயக விரோதமாக பேசியிருக்கும் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

இது அண்டை நாட்டு உள்விவகாரங்களில் தலையிடும் செயல் எனவும், இதனால் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை பாதிக்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

முதலமைச்சர் ஒருவரிடமிருந்து இதுபோன்ற கருத்துகள் வருவது துரதிரஷ்டவசமானது என கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்