நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் ஆதரவளிக்க வேண்டும்: மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை

🕔 January 10, 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்த்து அகற்றப்பட்டமைக்கு எதிராக – நாளை திங்கட்கிழமை வடக்கு – கிழக்கு முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவிக்கையில்;

“ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகங்களாக இலங்கைச் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுள்ளனர். ஆகக் குறைந்தது உயிரிழந்தோரை நினைவுகூரவும், நல்லடக்கம் செய்யவும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு அனுமதிகள் மறுக்கப்படுகின்றன. இவற்றுக்குப் பின்னால் ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகள் இருப்பதை நாம் அறிவோம். இவ்வாறான செயற்பாடுகளை ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதற்கு சிறுபான்மையினர் ஒன்றுபட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

“முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள மத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, தமிழ்த் தலைமைகள் குரல் கொடுத்து வருவதை நாம் மறக்க முடியாது. எமக்குள் உள்ள சிறிய சிறிய பேதங்களை மறந்து ஒன்றுபடுமளவுக்கு பேரினவாதம், சிறுபான்மையினரை அடக்கி, ஒடுக்குவதாகவே நாம்  கருதுகிறோம்.

எனவே, நாளை வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் பூரணமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நமது நாட்டில், இந்த அரசாங்கத்தினால் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் என்ற உணர்விலும் முஸ்லிம்கள் இந்த ஹர்த்தாலை ஆதரிப்பது அவசியம்.

ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகளிலிருந்து நமது சமூகங்கள் பாதுகாக்கப்படுவதற்கான உறுதியான அரசியல் அடித்தளங்கள், இந்த ஒத்துழைப்புக்களின் ஊடாக கட்டியெழுப்பப்படும் என நான் நம்புகின்றேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.    

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த இறந்தவர்களை நினைவுகூரும் தூபி உடைப்பு மற்றும் கொவிட்–19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை பலவந்தமாக எரியூட்டுவது போன்ற செயற்பாடுகள் நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி அவமதிக்கும் அரசாங்கத்தின் வெளிப்பாட்டையே எடுத்துக் காட்டுகிறது.

இந்நடவடிக்கைகளை கண்டித்து நாளை திங்கட்கிழமை (11) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தால் கடையடைப்புக்கு முஸ்லிம் சமூகம் முழு ஆதரவையும் வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்