றிசாட் பதியுதீனைகைது செய்தால்தான், சிங்கள வாக்குகளை பெற முடியும் என்கிற வங்குரோத்து நிலை, அரசங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது: ஜவாத் காட்டம்

🕔 July 19, 2020

ஏ.எல்.எம். ஷினாஸ் –

றிசாத் பதியுதீன் என்ற தலைவனை கைது செய்தால்தான் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற வங்குரோத்து நிலையை அரசாங்கம் அடைந்திருக்கின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல வேட்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கே.எம். ஜவாத் தெரிவித்தார்.

சம்மாந்துறை விழினையடி சந்தியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“உங்களின் தலைமைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலம்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தல் ஆகும். இது வரலாற்றை புதுப்பிக்கப் போகின்ற தேர்தலாக பார்க்க வேண்டியது அவசியமாகும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்காக நீங்களும் உங்கள் மனைவி பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும்.  றிசாட் பதியுதீன் என்ற தலைவனை கைது செய்தால்தான் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற வங்குரோத்து நிலையை அரசாங்கம் அடைந்திருக்கின்றது.

றிசாத் பதியுதீன் எனும் தலைமையை நாம் இழக்க முடியாது. அவரை மீட்க வேண்டும். அவருக்காக உயிர்களை கொடுப்பதற்கும் காத்திருக்கின்றோம்.

மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்கு எப்படி வீதிகளில் இறங்கி போராடினோமோ அப்படி வீதிகளில் இறங்கி போராடுவதற்கும் காத்திருக்கின்றோம்.

றிசாத் பதியுதீன் எனும் தலைமை இந்த நாட்டுக்கு என்ன அநியாம் செய்தது? நாட்டின் இறைமைக்கு எதிராக அவர் என்ன செய்தார்? எதுவுமே செய்யவில்லை.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் தனது உயிரையும் துச்சமென கருதி குரல் கொடுத்திருக்கிறார்.

விலைக்கு வாங்க முடியாத தலைவராக றிசாட் பதியுதீன் இருப்பதால்தான் அவரை சிறையில் அடைக்கப் பார்க்கிறார்கள். 52 நாள் ஆட்சி மாற்றத்தின் போது; கோடி கோடியாக பணத்தை தருகின்றோம், பதவிகளை தருகின்றோம், பொறுப்புகளைத் தருகின்றோம், வேலை வாய்ப்புகளை தருகிறோம் என்ற ஆசை வார்த்தை காட்டினார்கள்.

அதற்கு அடிபணியாத றிசாட் பதியுதீன் என்ற சக்தியை அல்லாஹ் தந்திருக்கின்றான்.  இந்த வரத்தை எங்களுக்கு கிடைத்த அருளை சிறையில் இட எத்தனிக்கின்றார்கள். இவர்களுக்கு பாடமாக றிசாட் பதியுதீன் இனும் எமது தலைவனை  அதிக ஆசனங்களுடன் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் இந்த உண்மையைப் புரிந்து கொண்டு சரியாக வாக்களித்தால், மூன்று முஸ்லிம் உறுப்பினர்களை பெறுவதற்கான நூறு வீத சாத்தியப்பாடு உண்டு. இது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மாத்திரம்தான் உண்டு. மாறாக டெலிபோன்  சின்னத்துக்கு அளிக்கப்படும் வாக்குகள் சிங்கள உறுப்பினர்களையே நாடாளுமன்றம் செல்ல வைக்கும்.

இதனை புரிந்துகொண்டு சரியாக வாக்களித்து மூன்று முஸ்லிம் உறுப்பினர்களை மாவட்டத்தில் வென்றெடுப்பதற்கு மயில் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்