கிழக்கு தொல்பொருள்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு தமிழர், முஸ்லிம் விரைவில் நியமிக்கப்படுவர்: அமைச்சர் டக்ளஸ்

🕔 July 8, 2020

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் செயலணிக்கு, துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் விரைவில் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு இருவரை பரிந்துரைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார்.

இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்திலேயே இவ்விவகாரம் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் யாரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இதுதொடர்பில் கவனம் செலுத்தியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அத்துடன் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த விவகாரம் பேசப்பட்டது. இதன்போது அமைச்சர் டக்ளஸின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி தனது முகப் புத்தகத்திலும் இதுதொடர்பில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியாகியிருந்தது.

இதையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் கவனத்திற்கு இன்றைய அசை்சரவை கூட்டத்தில் கொண்டு சென்றிருந்ததை அடுத்து, குறித்த பிரதிநிதிகளின் பரிந்துரைகளை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்பய ராஜபக்ஷ – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்