கட்டி முடிக்கப்படாத கிணற்றில் வீழ்ந்த சிறுவர்கள் இருவர் சம்மாந்துறையில் பலி; பட்டம் விடுவதைப் பார்க்கச் சென்றபோது நிகழ்ந்த துயரம்

🕔 May 10, 2020

பாறுக் ஷிஹான்

ட்டி முடிக்கப்படாத கிணறொன்றில் தவறி  வீழ்ந்து, இரண்டு ஆண் சிறுவர்கள் மரணமடைந்த சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்கு அருகில் பட்டம் விருவதை இவ்விருவரும் பார்க்கச் சென்ற போது, இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘புளோக் ஜே’ கிழக்கு -3 பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்த இரு சிறுவர்களது சடலங்களும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதவேளை சம்பவ இடத்துக்கு இன்றைய தினம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எம். நெளபீர் தலைமையில் சென்ற குழுவினர், அம்பாறையில் இருந்து வருகை தந்த தடயவியல் பொலிஸாருக்கு ஒத்துழைப்புகளை வழங்கினர்.  

இந்த நிலையில் உயிரிழந்த சிறுவர்கள் வீழ்ந்த கிணறு மற்றும் சுற்றுச்சூழலில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

03 மற்றும் 06 வயதுடைய 02 குழந்தைகள் இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்துள்ளனர்.

என்ன நடந்தது?

உயிரிழந்த சிறுவர்களின் தாய் – வீட்டில் சிற்றுண்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது, மேற்படி சிறுவர்கள் இருவரும் அருகில் சிறுவர்கள் பட்டம் விடுவதை பார்வையிட அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதன் போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சிறுவர்கள் வீழ்ந்த கட்டி முடிக்கப்படாத கிணறு, அவர்களின் வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

உயிரிழந்த சிறுவர்களின் தந்தை மத்தியகிழக்கு நாடொன்றில் பணி புரிந்து வருகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்