நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு எதிராக, சம்பிக்க மற்றும் குமார வெல்கம உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

🕔 May 9, 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஆட்சேபித்து, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை இந்த மனுவில் இவர்கள் ஆட்சேபித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தைக் கலைத்து கடந்த மார்ச் 2ஆம் திகதி ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி – நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவற்றை ரத்துச் செய்யுமாறும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரன இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் நாடளுமன்றம் கலைக்கப்பட்டு 03 மாதங்களுக்குள் புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்ற போதிலும், ஜூன் மாதம் 20 ஆம் திகதியானது 03 மாதங்களை கடந்த திகதியாகும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனூடாக அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

பொதுத் தேர்தலை ரத்துச் செய்யுமாறு கோரி – வேறு சிலரும் உச்ச நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்