மதுபான விற்பனை நிலையங்களை மறு அறிவித்தல் வரை திறக்கக் கூடாது: அரசாங்கம் உத்தரவு
நாட்டிலுள்ள மதுபான விற்பனை நிலையங்கள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடி விடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
நேற்றைய தினம் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் பகுதியளவில் தளர்த்தப்பட்டமையை அடுத்து, மதுபான விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மதுபான விற்பனை நிலையங்களில் நேற்றைய தினம் நுகர்வோர் முண்டியடித்து கொள்வனவு செய்த காட்சிகள், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி இருந்தன.
இதனையடுத்து, சமூக இடைவெளியின்றி இவ்வாறு முண்டியடித்தால், கொரோனா தொற்று இலகுவாகப் பரவிவிடும் என, பலரும் அச்சம் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான நிலையிலேயே, மறு அறிவித்தல் வரை – மதுபான விற்பனை நிலையங்களை திறக்கக் கூடாது என, அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.