உலக முஸ்லிம் லீக் தலைவர் வழங்கிய 05 மில்லியன் டொலர் பணத்துக்கு என்ன நடந்தது: ஓமல்பே சோபித தேரர் கேள்வி
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உலக முஸ்லிம் லீக் வழங்கிய 05 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது என, ஓமல்பே சோபித்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு முன்னாள் மேல்மாகாண ஆளுநர் ஏ.ஏ.எம். முஸம்மில் உள்ளிட்டவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் இதனைக் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கடந்தாண்டு ஜூலை மாதம் 30ஆம் திகதி கொழும்பு தாமரைத் தடாகத்தில் உலக நாடுகளிலுள்ள முஸ்லிம் தலைவர் கலந்துகொண்ட மாநாடு ஒன்று நடைபெற்றது.
இதன்போது உலக முஸ்லிம் லீக்கின் தலைவர் மொஹமட் பின் அப்துல்லா, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 05 மில்லியன் டொலர்களை (இலங்கை பெறுமதியில் சுமார் 958 மில்லியன் ரூபா) மைத்திரிபாலவிடம் அன்பளிப்பு செய்தார்.
எனினும் இந்த நிதி உரியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை. எனவே இந்த நிதிக்கு என்ன நடந்தது என்று ஓமல்பே சோபித்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.