பஷீர் சேகுதாவூத் தலைமையில் ஹிஸ்புல்லா இணைந்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டி

🕔 March 19, 2020

– மப்றூக் –

முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜே.எம். ஜவஹர்சாலி உள்ளிட்ட அணியினர், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இதற்கான வேட்புமனுவில் இவர்கள் இன்று வியாழக்கிழமை காலை கையெழுத்திட்டார்கள்.

முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் அங்கத்தவராக இணைந்து கொண்டு, இந்தத் தேர்தலில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ஜவஹர் சாலியும் இந்த அணியில் இணைந்து போட்டியிடுகின்றார்.

முன்னார் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் தவிசாளராகப் பதவி வகிக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, அதன் வண்ணத்துப்பூச்சி சின்னத்தில் போட்டியிடும் முதலாவது நாாடாளுமன்றத் தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கிய ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பானது ஏறாவூர், கொழும்பு மற்றும் கற்பிட்டி சபைகளில் உறுப்பினர்களை வென்றெடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே மேற்படி புகழ்பெற்ற அரசியல்வாதிகள், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறங்குகினறனர்.

இந்த அணியில் தமிழர்கள் மூவரும் சிங்களவர் ஒருவரும் வேட்பாளராகப் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்