நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவலையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நீதிமன்ற பிடியாணையுடன் வந்த அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்தனர்.
ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து அறிக்கையொன்று பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சனை கைது செய்வதற்கான கட்டளையை, நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிறப்பித்தது.
நாட்டின் பல செல்வாக்கு மிக்க நபர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி ஊடாகப் பேசிய உரையாடல்கள் அடங்கிய பல சர்ச்சைக்குரிய ஒலிப் பதிவுகள் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தன.
இதுவரை வெளியான ஒலிப்பதிவுகளில் சில நீதிபதிகள் மற்றும் நீதித்துறை சேவையில் உள்ள அதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நடத்திய உரையாடல்களும் அடங்கும்.