“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”: கனவு பலிக்குமா?

🕔 January 14, 2020

முகம்மது தம்பி மரைக்கார்

பொதுத் தேர்தல் ஒன்றுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் “அடுத்த நாடாளுமன்றில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை அமைப்போம்” என்று அதன் பங்காளிக் கட்சிகளின் சிறுபான்மைத் தலைவர்கள் அடிக்கடி சூழுரைத்து வருகின்றனர். “நாடாளுமன்றத் தேர்தலின் பிறகு ஜனாதிபதி கோட்டா, பிரதமர் சஜித்” என்று முன்னாள் அமைச்சர் மனோ கணேசன்  வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தமைத்துவப் பதவிகான ‘பாகப் பிரிவினை’  சூடு பிடித்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்காக ரணில் அணி ஒருபுறமாகவும், சஜித் தரப்பு மறுபுமாகவும் கயிறிழுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த லட்சணத்தில்தான் எதிர்வரவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, சஜித் பிரேமதாஸவை பிரதமராக்கப் போவதாக சிறுபான்மைத் தலைவர்கள் சபதமிட்டு வருகின்றார்கள்.

சிலரைத் தோற்கடிப்பதற்கு எதிராளிகள் யாரும் தேவையில்லை.. அவர்கள் தமக்குத் தாமே சொந்தச் செலவில் சூனியம் வைத்து, அந்தக் காரியத்தை முடித்து விடுவார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ, அந்தளவு ‘பாரிய’ தோல்வியை எதிர்கொள்வதற்கு அவரின் ஐக்கிய தேசியக் கட்சியினர்தான் காரணமாக இருந்தனர். ‘யானை’ அடிப்பதற்கு முன்னராக, ‘தானே’ அடித்துக் கொண்டு, அவர்களை அவர்களே தோற்கடித்துக் கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்குவதில் ரணில் தரப்புக்கும், சஜித் அணியினருக்கும் ஏற்பட்டிருந்த இழுபறிதான், அந்தக் தேர்தலில் சஜித் பிரேமதாஸ ‘பாரியளவில்’ தோல்வியடைவதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது. சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக களத்தில் இறங்கி வேலை செய்வதில் ரணில் தரப்பினர் காட்டிய அசமந்தம் மற்றும் புறக்கணிப்பு ஆகியவைதான், 13 லட்சம் வாக்குகளால் தோற்றுப் போகும் நிலையை ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஏற்படுத்தியது.

சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில் சிறுபான்மையினத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காட்டிய அக்கறையில் பாதிளவைக் கூட, ஐக்கிய தேசியக் கட்சியின் பல மூத்த அமைச்சர்கள் வெளிக்காட்டவில்லை என்பதுதான் களநிலைவரமாக இருந்தது.

இவ்வாறான கசப்பான அனுபவங்களின் சூடு தணிவதற்குள்தான் “சஜித் பிரேமதாஸவை பிரதமராக்கப் போகிறோம்” என்று, சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் சூழுரைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

சிறுபான்மைக் கட்சிளுக்கான நெருக்கடி

அரசியலில் சஜித் பிரேமதாஸவின் நிலை கிட்டத்தட்ட ‘சேற்றில் நாட்டிய கம்பு’ போல உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி  வழங்கப்படாது விட்டால், அவர் வேறு ஒரு அணியை உருவாக்கக் கூடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. அப்படி நடந்தாலும் நடக்காமல் விட்டாலும், ரணில் மற்றும் சஜித் தரப்பினர்களின் ‘வெட்டுக் குத்து அரசியல்’, எதிர்வரவுள்ள பொதுத் தேர்தலில் உச்சத்தைத் தொடுவதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளிகளாகவுள்ள சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுடைய நிலைதான் பரிதாபமாக உள்ளது. மிக நீண்ட காலமாகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொண்டு தேர்தல்களில் யானைத் சின்னத்திலே களமிறங்கி வந்த சிறுபான்மை கட்சிகள், ரணில் – சஜித் இழுபறி காரணமாக நெருக்கடிகளுக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொண்டு, பொதுத் தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் களமிறங்குவது, அந்தக் கட்சிகளுக்கு கடந்த காலங்களில் சாதகமாகவே அமைந்திருந்தது. ஆனால், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியே இரண்டாகப் பிளந்து கிடக்கும் நிலையில், அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து பொதுத் தேர்தலொன்றில் களமிறங்கும்போது, கடந்த காலத்தில் பெற்றுக் கொண்ட சாதகங்களைப் போல், பெற்றுக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குரியதாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்தான் இந்தக் கணம் வரை இருந்து கொண்டிருக்கிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் ஆதரித்துக் கொண்டு, ரணில் விக்ரமசிங்கவை மிகப் பகிரங்கமாகவே பல இடங்களில் விமர்சித்தமையை நாம் கண்டிருந்தோம். இந்தப் பின்னணியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் சிறுபான்மைக் கட்சிகள் கூட்டணியமைத்துக் களமிறங்குவதில் பாரிய சிக்கல்கள் உள்ளன. சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையெல்லாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணில் தரப்பு நிறைவேற்றுமா என்பதும் கேள்விக்குரியதாகவே உள்ளது.

எனவே, பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம், சஜித் பிரேமதாஸவின் கைளுக்குக் கிடைப்பதுதான், ரஊப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் மற்றும் மனோ கணேசன் போன்ற சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுக்கு வாய்ப்பாக அமையும். அப்படி நடக்கவில்லை என்றால், சஜித் பிரேமதாஸவின் அணியுடன் கூட்டணியமைத்து மேற்படி தலைவர்களின் சிறுபான்மைக் கட்சிகள் பொதுத் தேர்தலில் புதியதொரு சின்னத்தில் போட்டியிட வேண்டும். அல்லது சிறுபான்மைக் கட்சிகள் தத்தமது சின்னங்களில் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலை உருவாகும்.

உற்சாகம் பெற்றுள்ள அதாஉல்லா, கருணா தரப்பு  

ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிகளான சிறுபான்மைக் கட்சிகள் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில் இத்தனை இடர்பாடுகள் காணப்படும் சூழ்நிலையில்; மறுபுறமாக ஜனாதிபதியின் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைத்துள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் வெகு உற்சாகத்தோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு களத்தில் இறங்கிச் செயற்பட்டு வருகின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தல் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் போன்றோரை அடிக்கடி களத்தில் காண முடிகிறது.

ஜனாதிபதி தேர்தலில் அதாஉல்லா மற்றும் கருணா அம்மான் போன்றோர்  ஆதரவு வழங்கிய வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்துவிட்டார் என்பதன் அர்த்தம்; அதாஉல்லாவும், கருணா அம்மானும் அரசியலில் வென்று விட்டார்கள் என்று ஆகிவிடாது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்துள்ள அதாஉல்லா மற்றும் கருணா அம்மான் போன்றோர் மீண்டும் நாடாளுமன்றுக்குச் செல்வதிலேயே அவர்களின் வெற்றி தங்கியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற சிறுபான்மைக் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சற்று உசார் இழந்து போய் இருந்தாலும், அந்த நிலைவரமானது அதாஉல்லா மற்றும் கருணா அம்மான் போன்றோரின் வெற்றிக்கு வழிவகுக்குமா என்கிற கேள்விகளும் இருக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், அதிகாரத்தின் பக்கமாக சிறுபான்மை மக்கள் சாய்வது போல் ஒரு தோற்றப்பாடு காணப்படுகின்றது. அந்த நிலைவரத்தை தமக்கான வாக்குகளின் அதிகரிப்பாக அதாஉல்லாவும் கருணாவும் கருதுகின்றார்கள் போலவும் தெரிகிறது. இந்தக் கணிப்பீடு சரியானதுதானா என்பதை எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவுகள்தான் வெளிப்படுத்தும்.

முஸ்லிம்களும் பொதுஜன பெரமுனவும்

ஜனாதிபதியின் பொதுஜன பெரமுன கட்சியில் முஸ்லிம்கள் எவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லை என்பதும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் முஸ்லிம்கள் எவரும் அமைச்சர்களாக இல்லை என்பதும் பாரிய குறைபாடுகளாகும். குறிப்பாக முஸ்லிம் நாடுகளுடன் கோட்டாவின் அரசாங்கம் நட்புறவை வளர்த்துக் கொள்வதில், இந்த நிலைவரமானது சிக்கலை ஏற்படுத்தும். எனவேதான், ”எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாக ஆகக் குறைந்தது 13 முஸ்லிம்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பெற்றுக் கொள்வோம்” என்று, அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கூறியிருக்கின்றனர்.

உண்மையில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுஜன பெரமுன பெற்றுக் கொள்வதற்கு சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் பொதுஜன பெரமுன சார்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதற்கு அந்தக் கட்சி குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதனையும் எடுத்ததாகவும் தெரியவில்லை. பௌத்த பெரும்பான்மை வாதத்தை தூக்கிப் பிடித்து, அந்தக் கோஷசத்தின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிக் கொண்ட பொதுஜன பெரமுன; எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்தக் கோஷத்தினையே முன்னிறுத்தும் என்பதற்கான நிலைவரங்கள்தான் காணப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் அதாஉல்லா மற்றும் கருணா அம்மான் போன்ற பொதுஜன பெரமுனவின் பங்காளிகள், எவ்வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் போகின்றனர் எனத் தெரியவில்லை.

தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகுவதற்கு – பொதுத் தேர்லொன்றில் போட்டியிடுவதை விடவும், தேசியப்பட்டியல் ஊடாக சந்தர்ப்பங்களைப் பெற்றுக் கொள்வதே அதாஉல்லா மற்றும் கருணா அம்மான் போன்றோருக்கு நல்லதாக அமையும்.

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி போன்ற கட்சிகள், கடந்த பொதுத் தேர்தலில் பெற்றுக்கொண்ட எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் தேர்தலில் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவடைந்துள்ளதையும் களநிலைவரங்கள் காட்டுகின்றன. மேற்படி கட்சிகள் ஆதரித்த வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுப்போனமை, மேற்படி கட்சிகளின் எதிராளிக் கட்சிகள் ஆட்சியாளர்களுடன் கைகோர்த்திருக்கின்றமை மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியை இன்னும் பல ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்று தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களிடத்தில் கூட ஏற்பட்டுள்ள மனநிலை போன்றவை, மேற்படி சிறுபான்மைக் கட்சிகளுக்கான ஆதரவில் வீழ்ச்சியினை ஏற்படுத்தக் கூடும்.

சிறுபான்மையினரின் முடிவு

இந்த எதிரும் புதிருமான சூழ்நிலைகளுக்கு மத்தியில்தான் எதிர்வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பொருத்தமான முடிவினை எடுக்க வேண்டிய நிலைக்கு சிறுபான்மையின சமூகங்கள் தள்ளப்பட்டுள்ளன.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி ஒரு கட்சியை சார்ந்தவராகவும், பிரதமர் வேறொரு கட்சியை சார்ந்தவராகவும் இருந்தமையினால் ஏற்பட்ட இழுபறி குறித்து நாம் அறிவோம். அரசாங்கம் நடத்தியதை விடவும், ஜனாதிபதியும் பிரதமரும் அதிகாரக் கயிறிழுப்பில்தான் கடந்த ஆட்சியில் அதிகம் ஈடுபட்டனர். எனவே, தற்போது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள நிலையில், அடுத்து அமையவுள்ள அரசாங்கத்தை ஜனாதிபதிக்கு எதிரானதொரு தரப்பின் கையில் கொடுப்பது சாதுரியமான செயற்பாடாக அமையுமா என்கிற கேள்வி கணிசமானோரிடத்தில் உள்ளது.

“கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானால் இந்த நாட்டில் சிறுபான்மையினர் வாழவே முடியாது” என்று, கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசார மேடைகளில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் சிறுபான்மை மக்களிடத்தில் மிக மோசமானதொரு பீதியை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருந்த அச்சம் மற்றும் ஆபத்துக்களின் குறைந்தபட்சம் கூட, கோட்டாவின் ஆட்சியில் இப்போதைக்கு ஏற்படவில்லை என்பதுதான் ஆறுதலான விடயமாகும்.

மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சியில் விடப்பட்ட பிழைகளை இப்போது அவர்கள் உணர்ந்திருக்கக் கூடும். தங்கள் முன்னைய தோல்விக்கு எவையெல்லாம் காரணமாக அமைந்திருந்தன என்பதை நிச்சமாக அவர்கள் புரிந்திருப்பார்கள். எனவே, கோட்டாவின் ஆட்சியில் அந்தப் பிழைகளையெல்லாம் தவிர்க்க வேண்டுமென அவர்கள் நினைப்பார்களாயின், நல்லாட்சியை விடவும் நல்லதொரு ஆட்சியாக சிறுபான்மையினருக்கு கோட்டாவின் ஆட்சி அமையும் என்று நம்பலாம்.

எனவே, இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் போக்கு என்ன என்பதை விளங்கி, அதற்கு ஏற்றால்போல் சிறுபான்மையின சமூகங்கள் தமது அரசியல் வியூகங்களை வகுத்துக் கொள்தல் அவசியமாகும். குறிப்பாக, ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான அரசியலைப் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டிது முஸ்லிம்களுக்குள்ள பாரிய சவாலாகும். எதிர்வரும் பொதுத் தேர்தல், முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் மிகப் பெரும் சோதனைக் காலமாகும்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (14 ஜனவரி 2020)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்