கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கூடாது என்று கூறும் ஹரீஸுடன், கூட்டமைப்பினர் ஒரே மேடையில் உள்ளனர்: கருணா குற்றச்சாட்டு

🕔 January 13, 2020

– பாறுக் ஷிஹான் –

ல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூட்டாது என கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இருக்கும் மேடையில்தான் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். இப்படியிருக்கையில் எவ்வாறு கல்முனை பிரச்சனையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தீர்க்கப்போகிறார்கள் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கேள்வியெழுப்பினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும், தமிழர் போராட்டம் மௌனித்த பின்னர் கூட்டமைப்பினரும் திசைமாறிவிட்டனர் என்றும் கருணா அம்மான் கூறியுள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பிரிவுக்கான பொதுமக்கள் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும்போதே, இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

துரோகி பட்டம் என்பது, எனக்கு டொக்டர் பட்டம் மாதிரியாகும். நாலுபேர் தூக்கிப் பிடித்தால்தான் இப்போதைய தமிழ் தலைவர்களால் எழுந்து நிற்க முடியும். என்னை துரோகி என்று கூறுவமற்கு, எங்களுடைய தேசிய தலைவருக்கு (வேலுப்பிள்ளை பிரபாகரன்)  மாத்திரமே உரிமை உள்ளது. ஆனால் இறுதிவரை தலைவர் என்னை துரோகி என்று கூறவில்லை. அவர் சொல்லியிருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பல பிளவுகள் வந்து கொண்டு இருக்கின்றன. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் என்பவர்  தெரிவித்ததாக பேச்சு ஒன்று தற்போது உலா வருகின்றது. முன்னாள் ராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பெறுமதியான சொத்தை எழுதி தந்தால்தான் கொழும்பில் போட்டியிட வைப்பேன் என சுமந்திரன் எம்.பி கூறியிருக்கிறாராம். இதை நான் கூறவில்லை அவர்களே கூறுகின்றனர். இந்தளவிற்கு கேவலமான நிலைக்கு கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் தேசியம் பேச ஒருவருக்கு மாத்திரமே உரிமையுள்ளது. அவர்தான் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா. அவரைத் தவிர மட்டக்களப்பு, அம்பாறையில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கு உரிமையில்லை. அவர்களுக்கு யுத்த களம் தெரியுமா? யுத்த களத்திற்கு தமது பிள்ளையை வழியனுப்பி வைத்த வேதனை தெரியுமா? இல்லாவிடின் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் வேதனை தெரியுமா? இன்று மேதாவிகள் போல் தேசியம்  பேசுகிறார்கள்.

அம்பாறையில் இருகின்ற அரசியல்வாதிகள் கஞ்சிகுடியாறு காட்டில் அரைவாசியை  அழித்துவிட்டார்கள்.  அந்த மரங்களை உருவாக்குவதற்கு தலைவர் பல்லாயிரக்கணக்கான போராளிகளை ஈடுபடுத்தினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலத் தொடர்பற்ற முறையில் கல்வி வலயத்தை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உருவாக்க முடியுமெனில், ஏன் அம்பாறை மாவட்டதிலுள்ள சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி பிரதேசங்களை உள்ளடக்கியதாக ஒரு கல்வி வலயத்தை உருவாக்க முடியாது? இது இங்கு இருக்கின்ற அரசியல்வாதிகளின் தவறாகும். இந்த பிரதேசங்களை உள்ளடக்கிய கல்வி வலயம் உருவாக்ப்படுமானால் எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும்.

இன்று கருணா அம்மான் துரோகி என்கின்றனர். அதை பற்றி நான் கவலைப்படுவதில்லை அது டாக்டர் பட்டம் மாதிரிதான் எனக்கு இருக்கிறது.கடந்த கால  போராட்டம் நீடித்திருந்தால் நாம் அனைவரும் கொல்லப்பட்டிருப்போம்.தற்போது  அனைவரையும் காப்பாற்றியவர் நான்தான் இல்லாவிடின்  இங்கு இருக்கின்ற அரசியல்வாதிகள் யாரும் வந்திருக்க மாட்டார்கள்.

என்னை துரோகி என்று கூற எங்களுடைய தேசிய தலைவருக்கு மாத்திரமே உரிமை உள்ளது. ஆனால் இறுதிவரை தலைவர் என்னை துரோகி என்று கூறவில்லை. சொல்லியிருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பேன். எனக்கும்  தலைவருக்குமே தெரியும் என்ன பிரச்சனை என்று.

இன்று பலர் அரசியல் கட்சித் தலைவர்களை தேசிய தலைவர் என்று விழிக்கின்றனர். தேசிய தலைவர் என்றால் தலைவர் பிரபாகரன் மாத்திரம்தான். அது ஒரு வரலாற்று அத்தியாயம்; அதை மீண்டும் உருவாக்க முடியாது. அங்கு இருந்துதான் நான் வந்தேன். இல்லையெனில் கருணாவை உங்களுக்கு தெரிந்திருக்க முடியாது. இப்போது இருக்கும் தமிழ் தலைவர்களை தூக்கி நிறுத்துவதற்கு நான்கு பணியாட்கள் வேண்டும். அவர்களுக்கு காதும் கேட்பதில்லை, கண் பார்வையும் இல்லை. அவர்களைதான்  நாங்கள் கும்பிட்டு கொண்டு இருக்கின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்