அரசியலமைப்பில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது: அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு
இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது என்று அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க திம்புல் கும்புரே ஸ்ரீ விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார்.
அந்தத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடன உரை தொடர்பில், அஸ்கிரிய பீடத்தின் நிலைப்பாட்டை தெரிவிப்படுத்தும் விசேட அறிவிப்பிலேயே தேரர் இதனைத் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“இலங்கையில் 19 தடவை அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் மோசமானது 19 ஆம் திருத்தமாகும். ஜனாதிபதியினுடைய அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பிரதமரிடம் சில அதிகாரங்கள் , சபாநாயகரிடம் சில அதிகாரங்கள் என ஜனாதிபதியின் அதிகாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஜனாதிபதியின் அதிகாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளமையால் நாட்டில் ஏதேனுமொரு அவசர நிலைமை ஏற்படும் போது உடனடியாக தீர்வொன்றை எடுக்க முடியாத நிலைமை ஜனாதிபதிக்கு ஏற்படுகிறது. இது மிகவும் மோசமான நிலைமையாகும். இதில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறான மாற்றம் நிச்சயம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை தனது கொள்கை பிரகடன உரையின் மூலம் ஜனாதிபதி நினைவுபடுத்தியிருப்பது வரவேற்கக் கூடிய விடயமாகும்.
ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ மாத்திரமின்றி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் நாட்டின் முன்னேற்றத்துக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியே தெரிவித்தார்.
எனவே நாட்டின் நன்மைக்காக ஏதேனுமொரு நடவடிக்கையை ஜனாதிபதி முன்னெடுக்கும் போது, அதற்கான ஒத்துழைப்பினை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் வழங்குவாராயின், இந்நாட்டை வெகு விரைவில் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன” என்றார்.