முஸ்லிம் காங்கிரஸ், த.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன், மக்கள் காங்கிரஸின் முசலிப் பிரதேச சபை பட்ஜட் நிறைவேற்றம்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிர்வாகத்தின் கீழுள்ள முசலிப்பிரதேசபையின் அடுத்தாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 11 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.
16 உறுப்பினர்களை கொண்ட முசலிப்பிரதேசபையின் வரவு – செலவுத் திட்டம் இன்று திங்கட்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 05 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
அதாவது 04 உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம் காங்கிரசின் 02 உறுப்பினர்களும், பொதுஜனபெரமுனவை சேர்ந்த 01 உறுப்பினரும், சுதந்திரக் கட்சியை சேர்ந்த 01 உறுப்பினரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை சேர்ந்த 01 உறுப்பினருமாக ஐவர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
எதிர்க்கட்சியான முஸ்லிம் காங்கிரசின் இருவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருவரும், பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களித்தமை சிறப்பம்சமாகும்.
கடந்த உள்ளுராட்சி தேர்தலில் முசலிப் பிரதேசபையின் ஆளும்கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு பொதுஜன பெரமுனவில் தெரிவாகியிருந்த ஒரேயொரு உறுப்பினரும் சுதந்திர கட்சியில் தெரிவான ஒரேயொரு உறுப்பினரும் ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முசலிப் பிரதேசபையின் தவிசாளர் ஹலீபத்து சுபியான், இந்த வரவு – செலவு திட்டத்தை இன்று சமர்ப்பித்திருந்தார்.
கடந்த உள்ளுராட்சி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 07 ஆசனங்களை பெற்று முசலிப் பிரதேசபையை கைப்பற்றியிருந்தமை தெரிந்ததே.
இன்றைய தினம் முசலிப் பிரதேச சபைக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)