19ஆவது திருத்தத்துக்குப் பின்னர், பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வைத்திருக்கலாமா: என்ன சொல்கிறது சட்டம்

🕔 November 26, 2019

– மப்றூக் –

லங்கையினுடைய அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பாதுகாப்பு அமைச்சை தன்வசம் வைத்திருக்க முடியுமா? முடியாதா? என்கிற வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி தன்வசம் வைத்துக் கொள்ள முடியாது என்று சமூக வலைத்தளங்களில் கணிசமானோர் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், சில ஊடகங்களும் இவ்வாறான கருத்தினை முன்வைத்து செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து சட்டம் என்ன கூறுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டும், இது குறித்து மக்களைத் தெளிவுபடுத்தும் நோக்குடனும், இலங்கையின் சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் உடன் பேசினோம்..

“ஜனாதிபதி தனக்கு வேண்டிய அமைச்சுக்களை தன் வசம் வைத்துக் கொள்ள முடியும் என்று, 19ஆவது திருத்தத்துக்கு முன்னர், அரசியலமைப்பின் சரத்து 44(2) இல் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆயினும், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக, 44(2) சரத்து நீக்கப்பட்டு விட்டது. அதாவது ஜனாதிபதி தனக்கு  விரும்பிய அமைச்சுக்களை தன் வசம் வைத்துக் கொள்ளலாம் என்பது இப்போது இல்லை.

இருந்தபோதும் 19ஆவது திருத்தில் பிரிவு 51 எனும் இடைக்கால ஏற்பாட்டின் படி – பாதுகாப்பு, மஹாவலி மற்றும் சுற்றாடல் துறை ஆகிய மூன்று அமைச்சுக்களை ஜனாதிபதி தன்வசம் வைத்துக் கொள்ள முடியும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த இடைக்கால ஏற்பாடானது முன்னைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மாத்திரமே செல்லுபடியாகும். மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைந்தவுடன், பிரிவு 51 எனும் இடைக்கால ஏற்பாடு செல்லுபடியற்றதாகி விட்டது.

இந்தப் பின்னணியில்தான், 19ஆவது திருத்தத்துக்கு இணங்க ஜனாதிபதியொருவர் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் தன்வசம் வைத்திருக்க முடியாது என்கிற வாதமொன்றினையும் சிலர் முன்வைத்து வருகின்றனர். 

ஆனால், அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜனாதிபதி ஒருவர் தன்வசம் பாதுகாப்பு அமைச்சினை வைத்திருக்க முடியும். ஆனால், வேறு அமைச்சுக்களை வைத்திருக்க முடியாது.

அரசியலமைப்பின் 4(ஆ) சரத்து இதற்கான அதிகாரத்தை வழங்குகிறது.

‘இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட, மக்களது ஆட்சித்துறைத் தத்துவம், மக்களால் தெரிவு செய்யப்படும் குடியரசு ஜனாதிபதியினால் பிரயோகிக்கப்படுதல் வேண்டும்’ என்று மேற்படி 4(ஆ) சரத்து குறிப்பிடுகிறது.

அந்த வகையில், பாதுகாப்பு அதிகாரத்தை அரசியலமைப்பின் 4(ஆ) சரத்து – ஜனாதிபதிக்கு கொடுத்திருக்கிறது. 

எனவே, பாதுகாப்புத் துறையை ஜனாதிபதி தன்வசம் வைத்திருக்கலாமா இல்லையா என்கிற வாதம் இங்கு எழவேண்டிய தேவையே இல்லை.

பாதுகாப்பு அமைச்சுடன் சேர்த்து, வேறு துறைகளையும் ஜனாதிபதி வைத்திருப்பதற்கான அதிகாரத்தைத்தான் 44(2) சரத்து வழங்கியது. ஆனால், அந்த சரத்து இப்போது நடைமுறையில் இல்லை.

மேலும், பாதுகாப்பு அமைச்சை வேறு யாருக்கும் ஜனாதிபதி வழங்கவும் முடியாது.

இந்த இடத்தில் சிலருக்கு ஒரு கேள்வி எழலாம். பாதுகாப்பு அமைச்சினை வைத்திருக்கும் அதிகாரத்தை 4(ஆ) சரத்து ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கும் போது, 19ஆவது திருத்தத்தின் 51ஆவது பிரிவான இடைக்கால ஏற்பாடானது ஜனாதிபதிக்கு சுற்றாடல் மற்றும் மஹாவலி அமைச்சுக்களுடன் பாதுகாப்பு அமைச்சினையும் வைத்திருக்க முடியும் என ஏன் மீண்டும் குறிப்பிடுகின்றது என்று யாராவது கேட்கக் கூடும்.

இதற்கான விளக்கம் என்னவென்றால், இடைக்கால ஏற்பாட்டின் படி ஜனாதிபதி வைத்திருக்க முடியுமான அமைச்சுக்களாக சுற்றாடல் மற்றும் மஹாவலி ஆகிவற்றினை மட்டும் குறிப்பிட்டிருந்தால், அந்த இடத்தில் ஒரு குழுப்பம் ஏற்பட்டிருக்கும். சுற்றாடல் மற்றும் மஹாவலி அமைச்சுக்களை மட்டும்தான் ஜனாதிபதி வைத்திருக்க முடியுமா? பாதுகாப்பு அமைச்சை தன் வசம் வைத்திருக்க முடியாதா? என்கிற கேள்விகள் உருவாகியிருக்கும்.

எனவே, தெளிவுக்காகவே, சுற்றாடல் மற்றும் மஹாவலி அமைச்சுக்களைக் குறிப்பிட்டு, பாதுகாப்பு அமைச்சினையும் ஜனாதிபதி வைத்திருக்க முடியும் என்று, 51ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், 19ஆவது திருத்தத்துக்கு இணங்க தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சினை தன்வசம் வைத்திருக்க முடியும்” என்று, சட்ட முதுமாணி வை.எல்.எஸ் ஹமீட் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்