தில்ருக்ஷியின் தொலைபேசி உரையாடல் தொடர்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்

🕔 September 23, 2019

வன் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியுடன் தொலைபேசி ஊடாக மேற்கொண்டதாக கூறப்படும் உரையாடல் குறித்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை இன்று திங்கட்கிழமை சட்டமா அதிபர் முன்வைத்துள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளுக்காக அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு சட்டமா அதிபர், பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் எவன் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியுடன், சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்‌ஷி டயஸ்,  மேற்கொண்ட உரையாடல் என தெரிவித்து  நிஷங்க சேனாதிபதி குரல்பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

சிறிது காலத்திற்கு முன்னர் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த தொலைபேசி உரையாடலை கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பகிரங்கப்படுத்தினார்.

அந்த தொலைபேசி உரையாடலில் தில்ருக்ஷி டயஸ் இவ்வாறு பேசியிருந்தார்; “உங்கள் வர்த்தகம் இல்லாமற்போகும் என நான் எண்ணியிருந்தால், எனது வாழ்க்கையில் நான் அந்த வழக்கை தாக்கல் செய்திருக்க மாட்டேன். இந்த மோசமான அரசியலினால் உங்களின் அலுவலகத்திலுள்ள 7500க்கும் அதிகக் கடிதங்களை தனிப்பட்ட ரீதியில் நான் வாசித்துள்ளேன். அதிகாரிகளுடன் நீங்கள் எப்படி இருந்தீர்கள், குடும்பங்களை எவ்வாறு பார்த்தீர்கள் என நான் அறிந்துள்ளேன். நிஷங்க உண்மையில் நான் கவலையடைந்தேன். கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நான் வழக்கு தாக்கல் செய்திருக்க மாட்டேன். அந்த முழு செயற்பாடு தொடர்பில் நான் வேதனையடைந்துள்ளேன். எனக்கு சட்டத்தை தயாரிக்கவும் தெரியும், சட்டத்தை மீறவும் தெரியும்” என அந்த குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்ல பகிரங்கப்படுத்திய இந்த குரல் பதிவு தொடர்பில், பதிலளித்து தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்.

அதில்; “நிஷங்க சேனாதிபதிக்கு, அரச ஊழியர் என்ற வகையில் நீங்கள் பதிவு செய்துள்ள இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் பொதுமக்களுக்கு என்னால் தெளிவூட்ட முடியாது. அதனால் கீழுள்ள இரண்டு கேள்விகளுக்கு பதில் வழங்குங்கள்.

உங்களுடனான இந்த கலந்துரையாடலை அரசாங்கத்தின் எந்த அமைச்சர் வழங்கியது மற்றும் எதற்காக என்பதை மக்களுக்கு கூறுங்கள். அந்த தொலைபேசி உரையாடலை நீங்கள் திரிவுபடுத்தியுள்ளதுடன், பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக முழு உரையாடலையும் வெளியிடுங்கள்” என குறிப்பிடத்தக்கது.

லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக தில்ருக்ஷி டயஸ் பதவி வகித்த போது, எவன் கார்ட் நிறுவதனத்துக்கு எதிராக, அந்த ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்