கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனியின் வைப்புதாரர்களுக்குரிய பணத்தினை, மீளச் செலுத்துவதற்கு அரசாங்கம் தயார்
கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனியின் வைப்புதாரர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய தொகையினை மீள செலுத்துவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது.
இதன்படி 02 தொடக்கம் 10 மில்லியன் ரூபாவுக்கு இடைப்பட்ட தொகையினை, குறித்த கம்பனியில் வைப்பிலிட்ட வைப்புதாரிகளுக்கு, அந்தப் பணத்தினை மீண்டும் செலுத்துவதற்காக 3,945.6 மில்லியன் ரூபாவினை திறைசேரியில் இருந்து இலங்கை மத்திய வங்கியிடமிருந்து விடுவிப்பதற்கு, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
மேலும், கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனி லிமிடட்டின் சொத்துக்களை ஏலத்தில் விற்று, குறித்த பணத்தை திறைசேரிக்கு மீண்டும் செலுத்துவதற்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில், மேற்படி கோரிக்கையினையும் அமைச்சரவை ஏற்று, அங்கீகாரமளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.