பதுளை மஹதோவ தோட்டத்தில் 12 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின; 42 பேர் இடம்பெயர்வு
– க. கிஷாந்தன் –
பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக, மடுல்சீமை தேவால ஆறு பெருக்கெடுத்ததினால், மஹதோவ தோட்டத்திலுள்ள 12 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனன் காரணமாக, 46 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக, பதுளை மாவட்டத்தில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மஹதோவ தோட்டத்திற்கு அண்மித்து அமைந்துள்ள தேவால ஆறு நேற்று மாலை பெருக்கெடுத்தது. இதனால், அந்த ஆற்றிற்கு அருகில் அமைந்துள்ள 12 வீடுகள் வெள்ளித்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக 46 பேர் இடம்பெயர்ந்து, தற்போது மஹதோவ வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மண்சரிவு மற்றும் பாரிய கற்கள் புரண்டுள்ளமையினால், பஸரை – மடுல்சீமை பிரதான வீதியின் 07ஆவது மைல்கல் பகுதியுடான போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து பெக்கோ இயந்திர உதவியுடன் கற்பாரைகள் அகற்றப்பட்டு, பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை 80 தொடக்கம் 110 மில்லிமீற்றராக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் எதிர்வு கூறப்படுகிறது.