முதலமைச்சர்களும், அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு
மாகாண முதலமைச்சர்கள் இரண்டு மாதங்களுக்கொரு தடவை அமைச்சரவை கூட்டங்களில் கலந்துகொள்ள முடியும் என அமைச்சரவை ஊடகப்பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது தொடர்பில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்ட விடயத்தினைத் தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில் மாகாணசபையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக முதலமைச்சர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் தலைவர்களும் இதேபோன்று இரு மாதங்களுக்கு ஒரு தடவை அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கோரிக்கைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.