பாதுகாப்புத் துறைக்கு 260 கோடி ரூபாவை அன்பளிப்பாக வழங்க, சீனா இணக்கம்

🕔 May 15, 2019

லங்கையின் பாதுகாப்புதுறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க, சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளையில் இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென ஜனாதிபதியிடம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல், சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போதே, இவ்விடயங்கள் பேசப்பட்டன.

இதேவேளை, இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 150 கோடிரூபாய் பெறுமதி வாய்ந்த 100 ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கும் சீன ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு அரச தலைவர்களின் சந்திப்பினைத் தொடர்ந்து, இருநாட்டு பாதுகாப்பு துறையினரின் ஒத்துழைப்புக்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இதன்போது பயங்கரவாதத்தை ஒழிப்பதைப் போன்றே, இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக போலிப் பிரசாரங்களை பரப்பி மறைந்திருந்து பயங்கரவாதத்தை விதைக்கும் நபர்களையும் குற்றவாளிகளையும் கண்டறிவதற்கும் அந்த அக்குற்றங்களை தடுப்பதற்குத் தேவையான தொழிநுட்ப உபகரணங்களும் அறிவும் இலங்கையிடம் இல்லை என்று, ஜனாதிபதி தெரிவித்தார்.

இதனையடுத்து, அதற்கான உபகரணங்களையும் தொழிநுட்பத்தையும் இலங்கைக்கு வழங்குவதற்கு துரிதமாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சீன ஜனாதிபதி உறுதியளித்ததோடு, அது தொடர்பில் கண்டறிவதற்கு சீன தொழிநுட்ப குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாகவும், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்