வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களில் 600 பேர், வருடாந்தம் உயிரிழக்கின்றனர்
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுச் செல்வோரில் 600 பேருக்கும் அதிகமானோர், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையில் அங்கு ஒவ்வொரு வருடமும் உயிரிழக்கின்றனர் என்று, வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிலையினைக் குறைப்பதற்கும், வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
“வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்வோர், கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவல்கள் பிரிவில் தமது காரியங்களை நிறைவு செய்வதற்காகச் செல்லும் போது, பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே, மாவட்ட மட்டங்களில் நடமாடும் தூதரக அலுவல்கள் பிரிவினை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இதன் ஆரம்ப கட்டமாக பொலநறுவையில் மாவட்ட தூதரக பிரிவொன்று உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.