நிந்தவூரிலுள்ள தொழிற்பயிற்சி அலுவலகத்தை இடமாற்றக்கூடாது; றிசாட், ஹசனலி வலியுறுத்தல்

🕔 May 31, 2018

நிந்தவூரில் உள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை வேறெந்த பிரதேசத்திற்கும் இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சா் கலாநிதி சரத் அமுனுகமவிடம் எழுத்துமூலம் முன்வைத்துள்ள கோரிக்கையிலேயே அமைச்சா் இவ் வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன்அலியும் நிந்தவூரிலேயே மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலகம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

நிந்தவூா் மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலகமும் அதனுடன் இணைந்த மாவட்ட தொழிற்பயிற்சி நிலையமும் மு.கா. ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃபின் பெரும் முயற்சியால் நிறுவப்பட்டதாகும். மாவட்ட அலுவலகங்களை பரவலாக்கும் சந்திரிகா அம்மையாரின் வேலைத்திட்டத்தின் கீழ், தலைவா் அஷ்ரபின் நேரடிக் கண்காணிப்பில் இந்த மாவட்ட அலுவலகம் நிந்தவூருக்கு கொண்டுவரப்பட்டது.

முன்னாள் அமைச்சா் எம்.ரி. ஹசன்அலி இதற்கான காணியை நன்கொடையாக வழங்கினார். மாவட்ட அலுவலகத்துக்காகவும் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்துக்காகவுமே மறைந்த தலைவரும் ஹசனலி போன்றோரும் இவ்வளவு பிரயத்தனங்களை மேற்கொண்டு இந்த வளாகத்தை நிறுவினா்.

ஆனால் இந்த மாவட்ட அலுவலகத்தை எப்படியாவது அம்பாறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என சிலர் கடந்த பல வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். ஐந்து வருடங்களுக்கு முன்னா் இந்த அலுவலகத்தை அம்பாறைக்கு மாற்றுமாறு கடிதம் அனுப்பப்பட்டது.  இது தமிழ் பேசும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அப்போது ஹசன்அலியின் முயற்சியால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைமையிலான அணியினா் விடயத்துக்குப் பொறுப்பான அப்போதைய அமைச்சா் டலஸ் அழகப் பெருமவை சந்தித்ததை அடுத்து இம்முயற்சி கைவிடப்பட்டது.  

இருப்பினும்இ அதன் பிறகு அம்பாறை நகரில் நிழல் (உத்தியோகப்பற்றற்ற) அலுவலகம் நிறுவப்பட்டி டு அங்கு பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டார். அதாவது, நிந்தவூா் அலுவலகத்தின் தளபாடங்களை இடம்மாற்றாமலேயே அம்பாறையில் மாவட்ட அலுவலகத்தை நிறுவ சூட்சுமமான காய்நகா்த்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்ற விவகாரம் முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவா் எம்.ரி. ஹசன்அலி, கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான மக்கள் காங்கிரஸின் தலைவா் றிசாட் பதியுதீன் உட்பட பல அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கு சிலா் முயற்சிகளை எடுத்த போதும் அது வெற்றியளிக்கவில்லை. சிலா் கண்டும் காணாமல் இருந்துவிட்டனா்.

ஆனால், அமைச்சா் றிசாட்டும் முன்னாள் அமைச்சா் ஹசன்அலியும் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடியதுடன் இருவரும் அமைச்சா் சரத் அமுனுகமவை தொடர்புகொண்டு இவ்விடயமாக உரையாடியனா்.

மர்ஹூம் அஷ்ரபின் முயற்சியால் இது நிறுவப்பட்ட வரலாற்றையும் நிந்தவூரில் ஏன் மாவட்ட அலுவலகம் இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினா்.

இதனையடுத்து அமைச்சா் றிசாட் பதியுதீன் – அமைச்சா் அமுனுகமவை நேரடியாகச் சந்தித்து எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்து கலந்துரையாடியுள்ளார். நிந்தவூரிலேயே மாவட்ட அலுவலகம் தொடா்ந்தும் இருப்பதுடன் அது பௌதீக அடிப்படையிலும் கற்கைநெறிகளின் அடிப்படையிலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் இதில் அவா் கோரியுள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு நிறுவப்பட்டதற்குப் பிறகு அதன் இரு முக்கிய தலைவா்களும் இணைந்து மேற்கொண்ட இம்முயற்சியை சமூகநலன் விரும்பிகள் பாராட்டியுள்ளனா்.

(அமைச்சரிள் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்