ஹபாயா விவகாரம்; சண்முகா கல்லூரியின் மரபுகள் மீறப்படக் கூடாது: சம்பந்தன் தெரிவிப்பு

🕔 April 30, 2018

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கென உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு மரபு உண்டு. அந்த மரபுகளுக்கு ஏற்ப கருமங்கள் நடக்க வேண்டும். அவற்றை மீறாமல் பேச்சுகள் நடத்தப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் ‘ஹபாயா’ அணிவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில், ஊடகமொன்று கருத்து வெளியிட்டபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் பாடசாலை சுமார் 150 வருட பாரம்பரிய வரலாறைக் கொண்டது. அந்த நாட்களில் திருகோணமலையில் உள்ள இந்து மகளிருக்கு ஒரு பாடசாலை தேவையென சைவ இந்துப் பெரியார்களும் நலன்விரும்பிகளும் இணைந்து இந்த தனியார் பாடசாலையை ஆரம்பித்தனர்.

எனவே, அதற்கென உள்ள சம்பிரதாயங்கள் மதிக்கப்படவேண்டும் எனப் பெற்றோரும் பாடசாலை சமூகமும் விரும்புகின்றது. அந்தப் பாடசாலைக்கென உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரம்பரியம் மரபுகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். இந்த விடயங்கள் பேசப்பட்டு நிதானமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

எத்தனையோ சகாப்தங்களாக இருக்கும் நடைமுறையை திடீரென மாற்றிவிட முடியாது. எனவே, சில விடயங்களுக்கு பேசி தீர்வை நாம் காண வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்