மோட்டார் சைக்கிளில் ‘ஹஜ்’ செல்வதற்கு; காத்தான்குடியிலிருந்து மூத்த ஊடகவியலாளர் ‘புவி’ விண்ணப்பம்

🕔 April 12, 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் –

புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்வதற்காக காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் புவி றஹ்மதுல்லா என அழைக்கப்படும் எம்.ஐ. றஹமதுல்லா முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளார்.

காத்தான்குடியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான றஹ்மத்துல்லாஹ் இந்த அனுமதியை கோரியுள்ளார்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து மோட்டார் சைக்களில், புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு செல்வதற்கான அனுமதியை தருமாறு முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் இவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கான அனுமதியை கோரும் கடிதத்தினை நேற்று புதன்கிழமை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் காத்தான்குடியிலள்ள பிராந்திய அலுவலகத்தில் அதன் அலுவலக் பொறுப்பதிகாரி அஷ்ஷெய்ஹ் ஏ.எல். ஜுனைட் நழீமியிடம் உத்தியோக பூர்வமாக ஒப்படைத்தார்.

இது தொடர்பாக புவி றஹ்மதுல்லா கூறுகையில்;

“இலங்கையிலிருந்து மோட்டார் சைக்கிளுடன் இந்தியாவுக்கு விமானத்தில் சென்று, இந்தியாவிலிருந்து தரை வழியாக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் செல்வதற்காக நான் எண்ணியுள்ளேன்.

இதற்காக இலங்கை அரசாங்கம், மற்றும் சஊதி அரேபியா நாட்டு அரசாங்கம் அனுமதியை தரவேண்டும். ஹஜ்ஜுக்கான விண்ணப்பத்தினை கடந்த ஆண்டு ஒப்படைத்தேன்.

இதற்கான அனுமதியை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தருவதுடன் ஆதரவினையும் வழங்க வேண்டும்.

இதற்கான அனுமதிகள் கிடைக்கும் பட்சத்தில் நான் இந்த புனித பயணத்தினை மேற் கொள்வேன்.

இந்தியாவிலிருந்து தரை வழியாக சுமார் 10000 கிலோ மீற்றர் பயணிக்க வேண்டும்” என்றார்.

இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை வழிமார்க்கமாக செல்வதற்காக ஒருவர் அனுமதி கோரியிருப்பது இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்