அட்டாளைச்சேனையில் கூட்டாட்சி அமையும் சாத்தியம், அதாஉல்லாவினால் இல்லாமல் போகிறது?
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கூட்டாட்சியொன்றினை அமைப்பதில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் தரப்பு அளவுக்கு மீறிய நிபந்தனைகளை முன்வைப்பதாகத் தெரியவருகிறது.
இதன் காரணமாக, தேசிய காங்கிரசுடன் கூட்டாட்சி அமைப்பதைத் தவிர்த்து, எதிரணியில் அமர்வதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணியின் உள்ளுர் பிரமுகர்கள் யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தேர்தலுக்கு முன்னராகவே முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பில் இணையுமாறு, தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்திருந்த போதும், அதனை அவர் தட்டிக் கழித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரசும், மயில் சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் இணைந்து கூட்டாட்சியை அமைக்கக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையிலும், அளவுக்கதிகமான நிபந்தனைகளை கூட்டாட்சி அமைக்கும் பொருட்டு அதாஉல்லா முன்வைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், அதாஉல்லா விவகாரத்தில் சலிப்பு நிலைக்கு வந்துள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் உள்ளுர் பிரமுகர்கள், அதாஉல்லாவின் கட்சியுடன் கூட்டாட்சி அமைப்பதை விடவும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வது குறித்து யோசித்து வருவதாகவும் தெரியவருகிறது.