பிரதமர் பதவியை பின் கதவு வழியாகப் பெற்றுக் கொள்ள மாட்டேன்: கரு ஜயசூரிய
பிரதம மந்திரி பதவியையோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தினையோ பின் கதவு வழியாக, தான் ஒருபோதும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஆங்கில ஊடகமொன்றுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்கே, தான் விரும்புவதாகவும், தனது கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை குறைத்து மதிப்படும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் – அவர் இதன்போது கூறினார்.
வெறும் ஊகங்களை அடிப்படையாகக் கொண்ட செய்திகளை வெளியிட்டு, ஊடகங்கள் தனது பெயரை நியாயமற்ற முறையில் சிதைத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
“பிரதம மந்திரியாக வருவதற்கு நான் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அப்படி முயற்சிப்பதற்கான தேவையும் கிடையாது. கட்சியின் அங்கிகாரமின்றி நான் எதையும் செய்ய மாட்டேன்.
ஒரு விடயத்தை தெளிவாகச் சொல்கிறேன். கட்சியின் ஒருமித்த அங்கிகாரமின்றி பிரதமர் பதவியையோ அல்லது அது போன்ற பதவிகளையோ, ஒருபோதும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” எனவும் அவர் தெரிவித்தார்.