அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட்

🕔 December 22, 2017

 

ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அறிவித்தமையை நிராகரிக்கும், ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம் வாக்களித்தமைக்காக, அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரிவித்தார்.

கிழக்கு ஜெருசலத்தை, பலஸ்தீன் நாட்டின் தலை நகராக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி கூறினார்.  

அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா கடந்த 05ம் திகதி வெளியிட்ட அறிவிப்பை நிராகதித்தும், அந்த அறிவிப்பை வாபஸ் பெறுமாறும் கோரி, நேற்று  ஐ.நா. பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இலங்கை உட்பட 128 நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை நிராகரித்து வாக்களித்தன. 09 நாடுகள் அமெரிக்காவின் அறிவிப்ப ஆதரித்து வாக்களித்தன. இதன்போது, அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிராக இலங்கை வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பலஸ்தீனத்தை ஆதரித்தும், அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்தும் ஐ.நா. பொதுச்சபையில் இலங்கை வாக்களித்திருந்ததை  வரவேற்கிறேன்.  பாலஸ்தீனம் முஸ்லிம்களின் பூர்வீக பூமி. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை அரசாங்கம் வாக்களித்தமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இலங்கை வாழ் முஸ்லிம்களின் சார்பாக  நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், பலஸ்தீன மக்களின் நலனுக்காக அனைவரும் பிரார்த்திக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கும் எனது, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலஸ்தீன் நாட்டின் உயரதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்