அகலச் சிறகு விரிக்கிறது மயில்; அனுராதபுரம், கொழும்பு, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனித்து பறக்கிறது

🕔 December 12, 2017

 

நுராதபுர மாவட்டத்திலுள்ள அநுராதபுர நகர சபை, ஹொரவப்பத்தானை பிரதேச சபை, கஹட்டகஸ்கிகிலிய பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கெக்கிராவ பிரதேச சபை மற்றும்  மதவாச்சி பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் இன்று செவ்வாய்கிழ காலை  அநுராதபுர மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியதாக, அக்கட்சியின் அரசியல் அமைப்பு சட்ட விவகாரப் பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபை, தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை, கொட்டிகஹவத்தை பிரதேச சபை மற்றும் கொலன்னாவ பிரதேச சபை ஆகியவற்றிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதாகவும், இன்று பிற்பகல் அந்தந்த மாவட்ட செயலகங்களில் கட்டுப்பணத்தை கட்சி செலுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேச சபைகளிலும், திருகோணமலை மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச சபைகளிலும் தனித்துப் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செலுத்தியுள்ளது.

இது இவ்விதமிருக்க அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஜனநாயக சமாதானக் கூட்டமைப்பும் இணைந்து உருவாக்கிய ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(கட்சியின் ஊடகப் பிரிவு)    

Comments

புதிது பேஸ்புக் பக்கம்