நபரொருவரைக் கடத்திய வழக்கில், ஹிருணிகாவின் ஆதரவாளர்களுக்கு தண்டனை
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர் 06 பேருக்கு 12 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 02 வருட கடூழிய சிறைத்தண்டனையினை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
நபரொருவரை தெமட்டகொட பிரதேசத்திலிருந்து கடத்திச் சென்ற குற்றச்சாட்டினை ஏற்றுக் கொண்டமையினை அடுத்து, மேற்படி ஆறு பேருக்கும் இந்தத் தண்டனையினை, நீதிபதி ஆர். குருசிங்க விதித்தார்.
இதேவேளை, குற்றவாளிகள் ஆறு பேரும் தலா 32 ஆயிரம் ரூபாய் வீதம், பாதிக்கப்பட்ட நபருக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டும் எனவும் இதன் போது நீதிபதி உத்தரவிட்டார்.
எவ்வாறாயினும், இந்த வழக்கில் சந்தேக நபராகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நாடாளுன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேம சந்திர, தான் குற்றமற்றவர் எனத் தெரிவித்தமையினை அடுத்து, அவருக்கு எதிராக இந்த வழக்கு தொடர்ந்தும் கொண்டு செல்லப்படவுள்ளது.
ஹிருணிகா பிரேசந்திரவின் வாகனத்தில் வந்த மேற்படி பிரதிவாதிகள், 2015ஆம் ஆண்டு குறித்த நபரைக் கடத்திச் சென்று தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.